விலங்குகளை தடுக்க மின்வேலி அமைத்தால் நடவடிக்கை பாயும்! மதுரை எஸ்.பி! 

விலங்குகளை தடுக்க மின்வேலி அமைத்தால் நடவடிக்கை பாயும்! மதுரை எஸ்.பி! 

C.Kanan,

   காட்டு விலங்குகளை தடுக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி., பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

  மதுரை மாவட்ட வயல்வெளிகளில் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாய நிலங்களில் அனுமதியின்றி சிலர் மின்வேலி அமைத்துள்ளனர்.

   இதை தவறுதலாக விவசாய தொழிலாளர்கள் தொடும் போதோ, மிதிக்கும் போதோ இறப்பை சந்திக்கின்றனர்.

  இரண்டு தினங்களுக்கு முன் கள்ளிக்குடி அருகே வலையங்குளத்தில் கிருஷ்ணன் 36, வயலில் பருத்தி எடுக்க சென்றபோது ஊராட்சி துணைத்தலைவர் கதிர்வேல் அனுமதியின்றி அமைத்திருந்த மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்தில் பலியானார். காப்பாற்ற முயன்ற மனைவி அக்கம்மாள் காயமுற்றார். சிந்துப்பட்டி அருகே சாத்தங்குடியில் புல் அறுக்க சென்ற கருப்பசாமி மின்வேலியை மிதித்ததில் இறந்தார்.

 இது குறித்து எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது: அரசு அனுமதியின்றியும், உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும் பாதுகாப்பின்றி மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் தீங்கு இழைக்கும் வகையில் மின்வேலி அமைக்கக்கூடாது. அதைமீறி வயல்களில் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.