இரண்டு அமைச்சர்களுக்கு கல்தாவா?

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாட்டு அமைச்சர் இருவரின் மீது மக்களின் அதிருப்தி பார்வை நிலவுகிறதாம், ஆகவே அவர்களுக்கு முதலமைச்சர் கல்தா கொடுக்கப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு மக்கள் இடமளித்து இரண்டாம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இந்நிலையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மக்கள் நலப்பணிகளை மும்முரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நேரத்தில் சில உள்ளடி வேலை காரணமாக பா.ஜ.க.விற்கு பேசும் பொருளாக அவ்வப்பொழுது சூழல் திசை மாறுகிறது.
சில பல விவரங்களை வைத்துக்கொண்டு பா.ஜ.க., தமிழ்நாடு அரசை அசைத்துப் பார்க்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படியானால் மேற்சொன்ன அந்த விவரங்கள் அவர்கள் கைக்கு போக, கைகூலியாக செயல்பட்டவர்கள் யார்? என்கிற கோணத்தில் மாநில உளவு அமைப்புகள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பதைப்போல விசாரணையை இறுக்கினால் யூதாஸ் காரியோத் கண்டிப்பாக சிக்குவார்கள்.
சரி இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அமைச்சர்கள் துறை ரீதியாக என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ரிப்போர்ட்டுகளை கேட்டுப் பெற்று வருகிறார். அதில் திருப்தியளிக்காத ஒரு சில அமைச்சர்கள் குறித்து முதல்வர் சங்கடப்பட்டாராம். அப்படிப்பட்டவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படப் போகிறது என்கிறார்கள்.
அதாவது அமைச்சரவையில் உள்ள இலாக்காவை மாற்றப்படும் என்கிறார்கள்.
அந்த வகையில் இம்முறை இரண்டு அமைச்சர்களை கழற்றிவிட்டு புதிய இருவர் அமைச்சரவைக்குள் இடம் பிடிக்க உள்ளதாக சொல்கிறார்கள்.
பெண் அமைச்சர் ஒருவரது செயல்பாடு சரியில்லை என தலைமைக்கு ரிப்போர்ட் போயுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் துறைக்குள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக நெல்லை, தென்காசி மாவட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் புதியவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம்.
அதே போல் சீனியர் அமைச்சர் ஒருவரது செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என்று ஏற்கெனவே இலாக்கா மாற்றப்பட்டது. அந்த துறையிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி அவர் மாற்றப்பட உள்ளாராம்.
டெல்டா மாவட்டங்களிலிருந்து ஒரு அமைச்சர் இல்லையே என்ற குறையை இந்த முறை கட்டாயம் போக்க வேண்டும் என்பதால் வாரிசு ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.