சாராயம் கிடைச்சது...காய்ச்சுபவர்கள் எஸ்கேப்!!

கு.அசோக்,
சாராயம் கிடைச்சது ஆனால் காய்ச்சுபவர்கள் வழக்கம் போல எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1670 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் அடுப்புகள் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள சிந்தகாமணி பெண்டா, மாதகடப்பா, தேவராஜாபுரம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கலால் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிந்தகாமணி பெண்டா, தேவராஜ்புரம் ஆகிய மலை பகுதிகளில கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1670 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள், பேரல்கள் மற்றும் சாராய அடுப்புகள் ஆகியவற்றை அழித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாதகடப்பா பகுதியை சேர்ந்த காளிதாஸ், தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த மோகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.