அட்ராசிட்டி யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் அழைப்பு!

அட்ராசிட்டி யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் அழைப்பு!

 ஜான்.மரியஜோசப், 

 தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகிறது.  அந்த ஒற்றை யானையை விரட்ட செல்லும் வன ஊழியர்களையும் அந்த யானை தாக்கியது. இந்நிலையில் அந்த அட்டகாச யானையை அடக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

இது பற்றின விவரம் வருமாறு,

 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. குறிப்பாக லாரியில் ஏற்றி செல்லப்படும் கரும்புகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் காத்திருக்கிறது.

   சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கரும்பு இருக்கிறதா? என்று யானைகள் தேடி வருகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு யானை கூட்டம் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ்சை விரட்டியது. டிரைவர் சாதுர்யமாக பஸ்சை பின்நோக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இயக்கி யானைகளிடம் இருந்து தப்பினர்.

  இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது.

  அப்படியிருக்க தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி தனது தோட்டத்தில் இரவு காவல் பணி மேற்கொண்டார். அப்போது அவரது தோட்டத்துக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு அங்கு சென்ற விவசாயி மல்லப்பாவை யானை தாக்கி கொன்றது.

  இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, யானை தாக்கி இறந்த விவசாயி மல்லப்பா உடலையும் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆகவேவனத்துறையினர் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னர், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 இதற்கிடையே தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை பிடிப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

   அதில் மனித உயிர்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சின்னதம்பி என்ற கும்கி யானை வனத்துறை லாரி மூலம் ஏற்றப்பட்டு இன்று காலை தாளவாடி பகுதிக்கு வந்தடைந்தது.

  அப்பாடா ஒரு வழியாக அட்டகாச யானையை அடக்கிடுவாங்க என நம்பலாம்.