பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நடிகைக்கு பிடிவாரண்டு!

ஜி.சாந்தகுமார்,
நடிகை மீராமிதுன் சற்று பிரபலமானவர்தான். இந்நிலையில் அவர் பட்டியலின மக்களைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம்' என்றார்.
அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில்,பெங்களூரில் அவரை பிடிக்க போலிசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.