பண்ருட்டி இராமசந்திரனை சந்தித்த ஓபிஎஸ் டீம்! பொறுத்திருந்து பார்க்கனுமாம்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியலில் மிகவும் முக்கிய பங்காற்றி வருபவர் பண்ருட்டி இராமசந்திரன். இவரை சமீபத்தில் சசிகலா அண்ட் கோ சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
அதன் பின் ஒரு மாதம் கழித்து நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வம் அண்ட் கோவினர் பண்ருட்டி இராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
பழனிச்சாமியுடனான போட்டா போட்டியில் சட்ட ரீதியாக தோல்வியை சந்தித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடிய இடத்திலிருந்தாலும் அவருக்கு ஆலோசனைகள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா தரப்புடன் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தையில் உள்ளதால் அங்கிருந்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அப்படியிருக்க நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவுடன் சென்று பண்ட்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
இதற்கு முன்னதாக அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தை அட்ய்ந்த அன்று ஜூன் 17ஆம் தேதி ஓபிஎஸ் பண்ட்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் இருந்து வரும் அவர் இடையே அங்கு இங்கு சென்றாலும் கூட பல்வேறு இக்கட்டான நேரத்திலும் கட்சி தலைமைக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்.
அப்படியிருக்க ஓபிஎஸ், சசிகலா இருவரும் மாறி மாறி அவரை சந்தித்து ஆலோசனை செய்வது பழனிச்சாமியின் சட்ட போராட்டத்தை எதிர்கொள்ளவே என்று தெரிகிறது.
நேற்று பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துவிட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுகவின் மூத்த முன்னோடி, எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக பண்ருட்டி ராமச்சந்திரனை நாங்கள் சந்தித்தோம்.
நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களையே. அடிப்படைத் தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில்தான் எங்களுடைய அரசியல் பயணம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக தான் கருதுகிறேன். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் அனைவரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இதயப்பூர்வமான ஏற்பாடு. பொறுத்திருந்து பாருங்கள் எல்லாம் நன்மையாக முடியும். உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வோம்” என்று கூறினார்.