பஜாஜ் பைனான்ஸ் ஊழியரின் ரவுடியிஸம்!வாடிக்கையாளர் மண்டை உடைந்த பரிதாபம்!

பஜாஜ் பைனான்ஸ் ஊழியரின் ரவுடியிஸம்!வாடிக்கையாளர் மண்டை உடைந்த பரிதாபம்!

 ஜி.கே.சேகரன்,

தனியார் நிதி நிறுவன ஊழியருக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு.-வாடிக்கையாளர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி. 

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தீரா.

 இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் வீட்டு சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாணியம்பாடி கூஜா காம்ப்ளக்ஸ் வீதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில்  ரூ.1 லட்சம்  கடனாக  பெற்றுள்ளார். தன்னுடைய தம்பி கார்த்திக் மூலமாக இதை வாங்கினார்.

 இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக மாதம் மாதம் இரண்டாம் தேதி பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள் மூலம் செலுத்தி வந்த நிலையில் இந்த மாதத் தவணை செலுத்துவதில் தாமதம் ஆனது.

 அப்படியிருக்க, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிதி நிறுவன ஊழியர்கள் மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தீரா வீட்டிற்கு சென்று கேட்டபோது திங்கட்கிழமை வட்டி தொகையோடு செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

  ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நிதி நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இன்று தீராவின் தம்பி கார்த்திக் இந்த மாதத் தவணையை வட்டியுடன் சேர்த்து 6818 ரூபாய்  ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

  இதனை கவனிக்காத நிதி நிறுவன ஊழியர் ஒருவர் தீராவின் தம்பி கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை தங்களிடம் கொடுக்காமல் ஏன் ஆன்லைன் மூலம் செலுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.

  அதற்கு நீங்களும் பஜாஜ் நிறுவனத்தில் தானே வேலை செய்கிறீர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தினால் என்ன நேரடியாக செலுத்தினால் என்ன எனக் கேட்டபோது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 பின்னர் வாடிக்கையாளரான கார்த்திக், வாணியம்பாடி பகுதியில் உள்ள பஜாஜ் நிதிநிறுவனம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இது குறித்து முறையிட்டார்.

 அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,  இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இதில் ஆத்திரமடைந்த பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனம் ஊழியர், வாடிக்கையாளர் கார்த்திக் மீது நாற்காலியை  தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. 

 இதனால், தலையில் பலத்த காயமடைந்து கார்த்திக் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.