குரோமியக் கழிவுநீரை பொது இடத்தில் அவிழ்த்துவிடும் தோல் தொழிற்சாலைகள்!

ஜி.கே.சேகரன்,
பேரணாம்பட்டில் தோல் தொழில் தொழிற்சாலை கழிவுநீர் திறந்து விடுவதால் பொதுமக்கள், கால்நடைகள் விவசாய நிலங்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, புத்துக்கோயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல மாதங்களாக கனமழையை காரணமாக வைத்து அவ்வப்போது தொழிற்சாலையில் தேங்கும் கழிவுநீரை இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆற்று படுகைகளில் திறந்து விடுகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மழை காலத்தை பயன்படுத்தி தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது கழிவுநீரை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் செல்லும் கால்வாய்களில் திறந்து விடுகின்றனர்.
இந்த குரோமிய நீரானது அருகில் இருக்கும் கோட்டாறு வழியாக சென்று ஓங்குப்பம் கொத்தபல்லி சாலையில் செல்லும் குடிநீரில் கலந்து குடிநீரானது நுரை தள்ளியது போல் காணப்படுகிறது.
கழிவு நீர் சென்று குடிநீரை பாதிப்பதோடு, மண்வளத்தின் தரத்தை மாற்றுகிறது. அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டே காணப்படுகிறது.
மேலும் கால்நடைகள் கழிவு நீரை பருகுவதால் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுகிறது. தோல் தொழிற்சாலை கழிவு நீரை சுத்தகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற விதி இருந்தும் சுத்தகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் மழையை பயன்படுத்தி நேரடியாக திறந்து விடுவதால் கழிவுநீர் குடிநீரில் கலந்து குடிநீரை பாதிக்கின்றது.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.