முதல்வருக்கு அதிநவீன வசதிகள் கொண்ட பி.எம்.டபிள்யூ. கார்:- துபாய் அரசு வழங்கியது!
ஜி.எஸ்.மேத்யூராஜ்,
துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிக்க அதிநவீன வசதிகள் கொண்ட பி.எம்.டபிள்யூ காரை துபாய் அரசு வழங்கியது!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ந்தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபியில் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட பி.எம்.டபிள்யூ. காரை துபாய் அரசு வழங்கியுள்ளது.
அப்படியிருக்க, இன்று ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் மந்திரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். எதிர் காலத்தில் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்க புதிய ஒப்பந்தகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.