இளம் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டல்! மூவர் சிக்கினர்!
டி.முகமது இர்பான்,
பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரோஷன், இவர் நடைப்பெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது 10 ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டவர்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலின் போது ரோஷனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷேக் இஸ்மாயில், முகமது ஜைனு மற்றும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த சாதம் உசேன் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, அப்பொழுது மூவரும் ரோஷனுடன் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ரோஷனின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து இன்று ரோஷன் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் மூன்று இளைஞர்கள் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.