பத்திரிகையாளர்கள் சாலை மறியல்! மறைமுக தேர்தலை செய்தி எடுக்க தடை போட்டதால் கோஷம்!
ம.பா.கெஜராஜ்,
ஆம்பூர் பத்திரிகையாளர்கள் இன்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறைமுக தேர்தல் பற்றின செய்தி எடுக்க தடை போட்டதால் ஆவேசம் அடைந்து கோஷங்களை எழுப்பினர்.
கடந்த மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில் வெற்றி பெற்றவர்களில் தலைவர் பதவிக்கு போட்டிட விரும்புவர்களுக்கென மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த மறைமுக தேர்தலில் பல இடங்களில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து உட்கட்சிகாரர்களே போட்டியிட்டதால் அங்கெல்லாம் தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த வகையில்,திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சி ஆகியவற்றில் ரகளை ஏற்பட்டதால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 16 வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு கவுன்சிலராக வென்றவர் ஏஜாஸ் அகமது. அவரை நகரமன்ற தலைவருக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக திமுக தலைமை அறிவித்திருந்தது. ஆனால் அவரை எதிர்த்து 19 வது வார்டு கவுன்சிலர் ஷபீர் அகமதுவும் தலைவர் தேர்தல் களத்தில் குதித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் ஏஜாஸ் அகமது, நகரமன்றத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நாற்காலி உள்ளிட்டவைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார்.(அவர் ஆளுங்கட்சி என்பதால் போலிசார் இதுவரை அவர் மீது வழக்கு போடவில்லை) இப்படி ஆம்பூரில் பிரச்சனை எழுந்தது. ஆகவே அங்கு மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று மேற்படி நகராட்சியில் மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது.
அவற்றை செய்தி எடுக்க செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை போலிசார் அனுமதிக்காமல் செய்தி எடுப்பதை தடுத்தனர்.
நகரமன்ற வீதிக்கே செய்தியாளார்கள் வரக்கூடாது என்று பலவந்தமாக அவர்களை அப்புறப்படுத்தினார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம் என முடிவான போது, இந்த உத்தரவை போட்டதே அவர் தான் என்று அங்கிருந்த அலுவலர்கள் நக்கலாக சொல்லியிருக்கிறார்கள்.
எங்களை கடமையாற்ற விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வியெழுப்பிய ஆம்பூர் செய்தியாளர்கள் "சென்னை டு பெங்களூர்" தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. உடனே போலிசார் அங்கு வந்து மறியலை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.
இதே போல் தான் வாணியம்பாடி வட்டம் உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் தேர்தலை செய்தி எடுக்க யாருமே அனுமதிக்கப்பட்டவில்லை.
இது பற்றி ஒரு அரசு ஊழியர் கூறுகையில் அடப்போங்க சார் வட்டாட்சியரையே அனுமதிக்கலீங்க என்றார் வருத்தமுடன்.
அப்படின்னா... அந்த தேர்தலில் என்னதான் மர்மம் இருக்கோ.
கலெக்டர் ஆபிசில் தர்ணா!
அதே போல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நடைபெறும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் செய்தியாளர்களுக்கு அனுமதிக்கப்படாத நிலையில்,லஇதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியில் அமர்ந்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.