பா.ஜ.க.கூடாரத்தை காலி செய்யும் தலைகள்!

ம.பா.கெஜராஜ்,
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட சீட்டுகேட்ட மூத்த அரசியல்வாதிகள் பலருக்கு அக்கட்சி வாய்ப்பு அளிக்காததால் சாரை சாரையாக அந்த கூடாரத்தைவிட்டு விலகி காங்கிரஸ் முகாமில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபற்றின விவரம் வருமாறு,
அதானி தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமண் சவதி கேட்டிருந்த வேளையில், அவருக்கு சீட்டு தரப்படவில்லை.
அந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமட்டள்ளிக்கு சீட்டு வழங்கியுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவில் இருந்து விலகியதோடு, தனது எம்.எல்.சி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதற்கு முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை பெங்களூருவில் நேரில் சந்தித்து தான் காங்கிரசில் சேர விரும்புவதாக கூறினார்.
இதை அக்கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் லட்சுமண் சவதி கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் முன்னிலையில் லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார்.
அவருக்கு கட்சி கொடியை வழங்கி காங்கிரசில் சேர்த்து கொண்டனர். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய லட்சுமண் சவதி தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்துள்ளார். இவர் வட கர்நாடகத்தில் பலம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. அவர் எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் கட்சியில் சேர்ந்துள்ளார்' என்றார்.
40 சதவீத கமிஷன் விவகாரத்தால் பா.ஜனதா கட்சி அரசு இந்த முறை 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது' என்றார்.
ஆனால் இதற்கெல்லாம் அம்மாநில பாஜக செவிமடுக்கவில்லை என்பது தான் ஹைலைட்.