"5 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க துடிக்கும் திமுக பிரசிடெண்ட்..முதலமைச்சருக்கு புகார் மனு!

ஜி.பாலகுரு,
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, 18 புதுக்குடி பிரதான சாலையில், கணவரை இழந்த உஷா, தன் மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், உஷாவின் கணவரான லேட் ராஜேந்திரனின் சகோதரர் கல்யாணசுந்தரம், உஷா குடும்பத்திற்கு சேரவேண்டிய நிலங்கள், வாழை மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளிட்ட சுமார் '5 கோடி' மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை கல்யாணசுந்தரம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
உஷாவின் கணவரான ராஜேந்திரனுக்கு மூத்த சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் வாய்மொழியாக சொத்துக்களை பிரித்துக் கொண்டுள்ளனர்.
அப்படியிருக்க தற்பொழுது, ராஜேந்திரன் மற்றும் அவரது மூத்த சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டனர்.
ஆனால் இதுநாள்வரையிலும் ராஜேந்திரன் குடும்பத்திற்கு சேரவேண்டிய சொத்துக்களை கொடுக்கவில்லை.
அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் ராஜேந்திரனின் தாயார் மற்றும் அவருடைய சகோதரர்கள் பெயரிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்யாணசுந்தரம், உஷா குடும்பத்தினரை நிலங்களில் பயிர் செய்ய விடாமலும், குத்தகைக்கு விடுவதற்கு தடை செய்தும், சொந்த தம்பியின் குடும்பம் என்றும் பாராமல் மிரட்டி தொல்லைகள் கொடுப்பதாகவும்,உறவினர்களை தூண்டிவிட்டு பிரச்சனை செய்ய சொல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
உஷா குடும்பத்திற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சொத்துக்களை கல்யாணசுந்தரம் அபகரிப்பதற்கு முயற்சி செய்வதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், குடவாசல் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு மழைவெள்ளத்தை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சரிடம் நேரில் உஷா குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.
உஷாவின் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் கல்யாணசுந்தரம், 18 புதுக்குடி பஞ்சாயத்துக்கு, முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார்.மேலும் தற்பொழுது அவரது மகள் திவ்யா திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதாலும்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு கல்யாணசுந்தரம் சார்பில் உத்தரவு இடுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து, ராஜேந்திரனின் இளையமகள் கௌதமி சொல்லும்போது"எங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் அபகரிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்.
எங்கள் பராமரிப்பில் உள்ள நிலங்களில் பயிர் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும், இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தால், திமுக பொறுப்பாளர்களின் துணைக்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கல்யாணசுந்தரம் தடுத்து விடுகிறார். சொத்தின் மதிப்பு சுமார் 5 கோடிஇருக்கும்.
மேலும் திமுகவினரை கொண்டு மிரட்டுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளதாகவும், கல்யாண சுந்தரம் மற்றும் அவருடைய மகளான தற்போதைய திமுக ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் கோருகிறார்.