எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸை கட்சியில் சேர சொல்லும் செல்லூர் ராஜூ!

எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸை கட்சியில் சேர சொல்லும் செல்லூர் ராஜூ!

 மதுரை கண்ணன்,

 எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பி.எஸ்ஸிம் மாறி மாறி ஆதரவாளர்களை நீக்கிக்கொண்டிருக்கும் நிலையில், நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸை கட்சியில் சேர சொல்லு செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 அதிமுகவில்  ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்த பிறகு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் இடையே, யார் தலைமை இடத்தை பிடிப்பது என்பதில் போட்டி நிலவியது. இதனால், இருவரது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் மாறி மாறி கருத்து கூற ஆரம்பித்தனர்.

  ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கலந்துக்கொள்ளாமல் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பூட்டியிருந்த அதிமுக அவலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்து உள்ளே நுழைந்து ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். பிரச்சனையை கட்டுப்படுத்த வருவாய்துறை சார்பில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

 மறுபுறம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   உடனடியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கட்சியின் பொருளாளர் தான் என்றும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பொதுக்குழு கூட்ட தீர்மான நகலுடன் தேர்தல் ஆணையம், வங்கிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

   கடந்த 2 நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வமும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமியும் நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படியிருக்க மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ, "எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன் என்று கூறினார். அதோடு, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம், ஒ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை, யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஒ.பி.எஸ் புரிந்து கொள்ள வேண்டும், ஒ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

   ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வரும் நிலையில் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.