தேர்தலை காட்டி எருது கட்டுக்கு தடை! சாலை மறியலால் மக்கள் பாதிப்பு!

கு.அசோக்,
ஆம்பூர் அருகே கிராமத்தில் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி எருது விடும் திருவிழாவினை போலீசார் நிறுத்தியதால் கிராமமக்கள் 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
அங்கு எருதுவிடும் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், 179 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா இன்று நடைபெறவிருந்த நிலையில் நகர்ப்புற மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் நிகழ்ச்சியை தடை செய்துவிட்டது.
எருது கட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏமாற்றம் அடைந்த ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆம்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் நீண்ட நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.