அதிமுகவுக்கு வரிசைக்கட்டும் இஸ்லாமியர்கள்! நாடகமா?

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையுடனான ஏற்பட்ட பிரச்னையை முன்வைத்து அக்கட்சியினுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது.
அதன்பிறகு கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். பொய் சொல்லி சிறுபான்மையினர்களின் வாக்குகளை திமுக பெற்றதாக குற்றம்சாட்டினர். அண்மையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அவருக்கு சிறுபான்மையினர் காவலர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சேலத்தில் 500 இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை நாடகம் என்றும் பலர் கமெண்ட் அடித்துள்ளார்கள்.
மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி மசூதியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகையும் செய்தார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ், "திமுக ஆட்சிக்கு வரும் முன்பு 520 வாக்குறுதிகளை தந்தார்கள். அதில் ஒருசிலவற்றை நிறைவேற்றியுள்ளார்கள், அதனை நான் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக பச்சைப் பொய்யை சொல்கிறார் ஸ்டாலின்.
வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தார், பிறகு ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். இப்போது உதயநிதியை துணை முதல்வராக்கத் துடிக்கிறார். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என மூத்த அமைச்சர்களே தெரிவிக்கிறார்கள்" என்று கிண்டலடித்தார்.
மேலும், "பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... இல்லை என்று சொல்லவில்லை. சூழ்நிலை கருதிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்துத் தந்த கொள்கையில் இருந்து இம்மியளவு கூட பிறழமாட்டோம். அதிமுகவுக்கு மதமும் கிடையாது, சாதியும் கிடையாது. அனைவரும் சமம் எனக் கருதும் கட்சி அதிமுக" .
ஆனால், 1999ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய உடனேயே திமுக சென்று பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. 5 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகித்தது. ஆட்சி அதிகாரம் வேண்டுமெனில் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய கட்சி திமுக. திமுகவில் தங்கள் குடும்பத்தை தவிர்த்து கட்சிக்காக உழைக்கிற யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என ஸ்டாலினை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று தடலாடியாக பேசினார்.