சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம்! ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை!!

சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம்! ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை!!

Ma.ba.Gajaraj, 

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக

ப.சிதம்பரம், வீடு, கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

 

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

   டெல்லியில் இருந்து வந்திருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் குறித்தும் விசாரித்தனர்.

 கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போடப்பட்டிருப்பது சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெரிய வந்தது.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

  250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சென்னையில் 3 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. மும்பையில் 2 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

 கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

   இதுகுறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்