மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் -தெலுங்கானாவில் தொங்கு சபை! பரபரப்பு கருத்து கணிப்புகள்!

வி.டி.வித்யாசாகர்,
இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்தியப் பிரதேசத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என பல்வேறு தொலைக் காட்சிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் கணித்துள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில் கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக சென்றதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.
அம் மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் 77.15% வாக்குகள் பதிவான நிலையில், அவை வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் பல கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன என்றாலும் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 230 இடங்களில் 116 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியை அமைக்கலாம் என்கிற நிலையில் உள்ளது.
டைம்ஸ் நவ் - இடிஜி எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 105 - 117 இடங்களில் வெற்றிபெறலாம் என்றும், காங்கிரஸ் 109 - 125 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் கணித்துள்ளது. ஜன் கீ பாத் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 100-123 தொகுதிகளிலும், காங்கிரஸ் 102-125 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறது. டிவி9 - போல்ஸ்ட்ராட் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 106-116 இடங்களிலும், காங்கிரஸ் 111-121 இடங்களிலும் மற்ற கட்சிகள் 6 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ரிபப்ளிக் - மெட்ரிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 118-130 தொகுதிகளிலும், காங்கிரஸ் 97- 107 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏபிபி - சி வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி பாஜக 88- 112 இடங்களிலும், காங்கிரஸ் 112 - 137 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 2-8 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றன.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகமான டெனிக் பாஸ்கர், பாஜக 95-115 இடங்களிலும், காங்கிரஸ் 105-120 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. சிஎன்என் நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் பாஜக 116 இடங்களையும், காங்கிரஸ் 111 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றும் என கூறியிருக்கிறது.
ஆக கருத்து கணிப்பு நடத்திய ஊடகங்கள் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்திருக்கின்றன.
தெலங்கானாவில் தொங்கு சட்டசபை!
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் கட்சிக்கு டஃப் கொடுத்து வருகிறது. மாநிலப் பிரிவினைக்கு முன்பு தான் ஆட்சி செய்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது. கர்நாடாகாவில் வெற்றியை பறித்த காங்கிரஸ் மேலும் ஒரு தென் மாநிலத்தில் ஆட்சியமைக்க தீவிரமாக உள்ளது.
சிஎன்என் கருத்துக்கணிப்பின் படி தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என கூறியுள்ளது. அதன்படி காங்கிரஸ் 56 இடங்களையும், பிஆர்எஸ் 48 இடங்களையும் கைப்பற்றும் என கணித்துள்ளது. பாஜக 10 இடங்களையும், எம்ஐஎம் - 5 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. சாணக்யா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் 67-78 இடங்களையும் பிஆர்எஸ் 22-31 இடங்களையும், பாஜக: 6-9 இடங்களையும், ஒவைசி பார்ட்டி: 6-7 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பு ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அதன்படி பிஆர்எஸ் 66 இடங்களையும், காங்கிரஸ் 37 இடங்களையும் மத்தியில் ஆளும் பாஜக 7 இடங்களையும் மற்ற கட்சிகள் 9 இடங்களை கைப்பற்றும் என்றும் கணித்துள்ளது.
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பும் தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 48-64 இடங்களையும் பிஆர்எஸ் 40-55 இடங்களையும் கைப்பற்றும் என்றும் பாஜக 7-13 இடங்களையும் ஒவைசி பார்ட்டி: 4-7 இடங்களை கைப்பற்றும் என கணித்துள்ளது.