பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பி.எஸ். போட்டிக் கூட்டம்!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பி.எஸ். போட்டிக் கூட்டம்!

 ம.பா.கெஜராஜ்,

 அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித் தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள்.

 அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் நீடிக்கிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

  எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக  தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.

 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

 அதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று ரித்தர்டன் சாலையில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கையெழுத்து போட்டு விட்டு அரங்கத்துக்குள் சென்றனர்.

 எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்கிற கோஷத்தை முன் வைத்துள்ள பன்னீர் குரூப் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.