உத்தரபிரதேசத்தை போல தமிழகத்திலும் கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

உத்தரபிரதேசத்தை போல தமிழகத்திலும் கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

   உத்தரபிரதேசத்தை போல தமிழகத்திலும் கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 நேற்று முன் தினம் செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பா.ம.க. நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விபாரத்தை முடித்துக்கொண்டு இரவு பத்து மணிக்கு கிளம்பிய போது அவரை ரவுண்டு கட்டி வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினார்கள்.

 இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அப்போது கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். கொலையாளிகளில் ஒருவன் செங்கல்பட்டு அடுத்த புலிபாக்கம் பகுதியில் ரெயில்வேபாதை அருகே தப்பி செல்லும் போது செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அவனை பிடிக்க முயற்சி செய்தனர்.

 போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றதுடன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீது கற்களை வீசியும் மற்றும் மறைத்து வைத்திருந்த கத்தியாலும் தாக்க முயன்றார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபர் மீது ஒரு ரவுண்டு சுட்டார். இதில் வாலிபரின் இடது காலில் குண்டு பாய்ந்ததில் அவன் விழுந்தான். குற்றவாளியை போலீசார் சுட்டுபிடித்து உள்ள சம்பவம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 விசாரணையில் அவன் செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

   நாகராஜ் கொலையை கண்டித்து இன்று காலை வணிகர் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் மறியலில ஈடுபட்டனர்.

 இந்நிலையில் பா.ம.க.தலைவர் டாக்டர் இரா.அன்புமணி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 அதில்  மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன், செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே 22-ந் தேதியில் இருந்து இப்போது வரையிலான 50 நாட்களில் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

 செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

 அனைத்திலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூலிப்படையினரின் கூடாரமாக மாறி வரும் நிலையில், அவர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

 தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் கூலிப்படை கொலைகள் அதிகரித்து விட்டன. கடலூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்வில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கூலிப்படையின் அட்டகாசங்களும், கொலைகளும் அதிகரித்து வருவதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் அத்துறையை கவனிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குதான் அவப்பெயரை சேர்க்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை அட்டகாசங்களை முழுமையாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்தில் ஒழிக்கப்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் கூலிப்படையினர் ஒடுக்கப்பட வேண்டும்.

   இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் பா.ம.க. சார்பில் 11-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அப்போராட் டத்திற்கு பா.ம.க. தலைவரான நானே தலைமையேற்கிறேன். பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை அமைப்புகளின் நிர்வாகிகளும், பாட்டாளி சொந்தங்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.