40% கமிஷன் போச்சுன்னா? இப்படிதான் கட்ட முடியும்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட அடித்தளம்
கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியிருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ஊராட்சியில் ஏற்கனவே இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அதை அப்புறப்படுத்தி மற்றொரு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு ரூ.13லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது வருகிறது.
இப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணி தொடங்கியது. இந்நிலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தின் அடித்தளம் மற்றும் தூண்கள் சாதாரணமாகவே கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் மிகவும் தரமற்ற முறையிலும் தரமற்ற பொருட்களை வைத்து கட்டப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் ஆதாரத்துடன் குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தின் அடித்தளத்தை கைகளால் பெயர்த்து எடுத்து அதை காட்டி நியாயம் கேட்டு வருகிறார்கள்.
இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகள் படிப்பதற்காக கட்டப்படுவதால் தரமற்ற முறையில் பொருட்களை வைத்து கட்டுவது குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் சம்பந்தபட்டதுறை அதிகாரிகள் உடனடியாக அங்கன்வாடி கட்டிட பணியை ஆய்வு செய்து, கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு தரமான பொருட்களை வைத்து கட்டிடத்தை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
விசாரித்த போது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என 40 சதவிகிதம் கமிஷன் போய்விட்டதாம். அது போக மீதுயுள்ள தொகையில் இப்படித்தான் கட்டமுடியும் என்கிறார்களாம்.