இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடும் ஓ.பி.எஸ்.! மோடி மீண்டும் பிரதமராக அமர பாடுபடப்போவதாக சொல்கிறார்!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும், மோடி பிரதமராக வர பாடுபடுவோம் என்றெல்லாம் ஓ.பி.எஸ்.மதுரையில் கூறியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. ஆனாலும் கூட சற்றேதும் மனம் தளறாத ஓ.பி.எஸ். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அப்படி மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவின் போயஸ் வீட்டுக்கு அனைத்து கட்சியினரும் வந்து அதிமுக ஆதரவு தருவதாக சொல்வார்கள். அதன் பிறகுதான் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவர்களை அழைத்து பேசுவார்கள். இப்போது தொகுதி பங்கீட்டுக கே.பி.முனுசாமி தலைமையில் குழு அமைத்துள்ளார்கள்.
கே.பி.முனுசாமி எங்கே சென்றாலும் அந்த இடம் விளங்காது. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எம்ஜிஆர் மாளிகையில் நாள் முழுவதும் அமர்ந்திருந்தார்கள். எந்த கட்சியும் அங்கு போகவில்லை. தேர்தல் காலங்களில் அகில இந்திய தலைவர்களே ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிமுகவை சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கே சென்று பாழ்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி".
தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியில் சேர்த்துக்கொள்ள ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தான் தோன்றிதனமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் தொண்டர்கள் அவரை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும்.
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைக்க யாரும் விரும்பவில்லை. கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டு இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார்கள், எதற்காக தோற்கும் கட்சியில் சென்று சேர என்று மற்ற கட்சித் தலைவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஏனெனில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக வெற்றிபெறவே இல்லை. மக்கள் அவரை நம்பவில்லை என்று வரிசைப்படுத்தி பேசினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப்போகிறது. அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு வந்துள்ளதே தவிர தொண்டர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு வரவில்லை. பாஜக கூட்டணியில்தான் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக வர பாடுபடுவோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக தற்காலிகமாகவே இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் வழங்கப்படும். நாங்கள்தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்" என்று சொன்னார்.