ஆளுங்கட்சியினர் மோதலால் காவல் துறையினருக்கு தர்ம சங்கடம்! ஒன்றியக்குழு சேர்மன் பதவிக்கு ரேஸ்! தடியடி கலாட்டாவில் முடிந்த பதவியேற்பு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஆலங்காயம் கந்திலி ஜோலார்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவியேற்றுகொண்டனர், இதில் ஆலங்காயம் ஒன்றியத்தில் ஆளுங்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் போலிசார் தடியடி நடத்தினர்.
திருப்பத்தூர்மாவட்டம்,கந்திலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பாமக திமுக,அதிமுக உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் பதவியை ஏற்றுகொண்டனர்.
இதே போன்று ஜோலார்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் திமுக,அதிமுக, ஆகிய கட்சியினர் பதவியை ஏற்றுகொண்டனர் இதே போன்று திருப்பத்தூரில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் தேர்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவியை ஏற்றுகொண்டனர்.
ஆலங்காயம் ஒன்றிய குழு உறுப்பினர்களும் பதவியை ஏற்றுகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் 125 ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் 208 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1779 கிராம வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் இன்று ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2125 பேர் பதவியை ஏற்றுகொண்டனர்.
இதில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா நிகழ்வு இன்று ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், வெளியே வந்த திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிலரை ஒன்றாக சேர்ந்து ஒரு வாகனத்தில் ஏற முற்பட்டனர்.
அப்பொழுது அவர்களை திமுகவில் உள்ள மற்றொரு கோஷ்டியினர் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து தங்களுடைய வாகனத்தில் அள்ளிச்செல்ல முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே அடிதடி ஏற்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த வாகனம் ரவுண்டு கட்டி தாக்கப்பட்டது.
சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் அவர்களை கலைந்து போகும்படி கூறியும் அவர்கள் கலைந்து போகாமல் கைகலப்பில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒரு ஜீப்பில் ஏறி அங்கிருந்து வேகமாக சென்றுவிட்ட நிலையில் நாளை மறுதினம் நடைபெற இருக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்வில் பயங்கர மோர்தல் வெடிக்கும் என்று தெரிகிறது.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டு, ஆளும் திமுகவினர் இரு பிரிவினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கும் நடக்கும் மோதலாகவே இது பார்க்கப்படுவதால் காவல் துறையினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தம் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களில் 11 திமுகவும், 4 அதிமுக,2 பாமக, 1 சுயேட்சை வேட்பாளர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.