கறுப்புக் கொடிகளை சின்சியராக அகற்றிய போலிசார்!

கறுப்புக் கொடிகளை சின்சியராக அகற்றிய போலிசார்!

  ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் அருகே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காத மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த மலை கிராம மக்கள். அவற்றை அகற்றிய போலிசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிகுட்பட்ட காமன்தட்டு ,சீக்கஜோனை ,உள்ளிட்ட மலை  கிராமங்களில் எஸ் .டி சமுகத்தைச் சேர்ந்த 2889 வாக்காளர்களும், பொதுப்பிரிவினர் 551 வாக்காளர்கள் என 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

 இந்த நிலையில்  ஒவ்வொரு தேர்தலின் போதும் பெரும்பான்மையாக வசித்து வரும்  (எஸ்.டி)  சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இட ஒதுக்கீடு அளித்து வரப்பட்டது.

 ஆனால், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில், மேற்படி ஊராட்சியில் ஒருவர் கூட  இல்லாத சமூகத்தை சேர்ந்தவருக்கு இட ஒதுக்கீடு  ஒதுக்கியுள்ளதை மறுபரிசீலனை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாம்.

   காமன்தட்டு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சிவகுமார் ஆகியோர் தேர்தலை நிறுத்த கோரி மனு அளித்துள்ள நிலையில், காமன்தட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி இந்துமதியின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர்.

  இதனால் நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து மக்களும் தேர்தலைப் புறக்கணிப்போம் என கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு,வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியிடம்  மனு அளித்தனர்.

   இதேபோல் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்திருந்தனர்.

  இருந்த போதும் அவர்களது கோரிக்கையை ஏற்காதபடியால், மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி  மலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வீடுகளில் கருப்புக் கொடியை அகற்றினர்.

   வீட்டுக்குள் அத்துமீறி நுழையலாமா என்று மலைகிராம மக்கள் காவல்துறையினசாடினர். இதனால் இருதரப்புக்கும்  இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

 இறுதியில் போலிசார் கறுப்புக்கொடிகளை கழற்றி எடுத்துச்சென்றனர்.