சஸ்பெண்டு கிலியில் தி.மு.க.வினர் ! ஒர்க் அவுட் ஆகுமா?

ம.பா.கெஜராஜ்,
சஸ்பெண்டு கிலியில் சிக்கி தி.மு.க.வினர் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்திருந்தும் பல மாவட்டங்களில் அக்கட்சியினர் நிம்மதியை இழந்துள்ளார்கள். தலைமைக்கும் அதேநிலைதான்.
ஒரு காலத்தில் கட்டுகோப்பான கட்சி, உறுப்பினர்கள் அனைவரும் உடன்பிறப்பு என்று முழங்கிக் கொண்டிருந்ததை தற்போது அடக்கி வாசிக்கும்படியான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை பதம் பார்த்த கட்சியினருக்கு திமுக தலைமை ராஜினாமா செய்ய வழிகாட்டி எச்சரிக்கை விடுத்ததே இதற்கு முக்கிய காரணம்.
இது பற்றின விவரம் வருமாறு,
திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பட்டியலை தி.மு.க தலைமை மார்ச் 3-ம் தேதி வெளியிட்டது.
ஆனால், மறுநாள் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் தி.மு.க-வினர் சிண்டிகேட் போட்டுக்கொண்டு ஜெயித்துவிட்டனர். வி.சி.க., கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் என கூட்டணியிலுள்ள கட்சியினருக்கான பதவிகளை தி.மு.க-வினர் பறித்துக்கொண்டனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.
இந்நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரபரப்பான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் ``கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்று வழியில் வெற்ற பெற்ற தி.மு.க-வினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும். இல்லையெனில் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எச்சரிகையுடன் நின்றுவிடாமல், தி.மு.க அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளரை போட்டியிட வைத்ததால் பூவிருந்தவல்லி நகரச் செயலாளர் எம்.ரவிக்குமாரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து செயலிலும் தி.மு.க தலைமை இறங்கியது,
அந்த வரிசையில் மதுரை தெற்கு மாவட்டம் , திருமங்கலம் நகரக் கழகப் பொறுப்பாளர் சி.முருகன் , உசிலம்பட்டி நகரக் கழகச் செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி , உசிலம்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர் இ.சுதந்திரம் , தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை எம்.ரவிக்குமார் , உசிலம்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் மொ.சந்திரன் - வேலூர் மேற்கு மாவட்டம் , ஆம்பூர் நகரக் கழகச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் மற்றும் எஸ்.எம்.ஷபீர் அகமத் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் , கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுடன் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பனும், மாநில மகளிர் அணி துணைப்பொதுச்செயலாளர் மீனா ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது தான் ஹைலைட்.
இந்த சஸ்பெண்டு அறிவிப்பானது மாற்று வழியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்டவர்கள் தலைமையின் எச்சரிக்கையை மதித்து பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து திருமாவளவன் சுட்டிக்காட்டுகையில் ``வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 8 இடங்களை தி.மு.க-வினர் கைப்பற்றியுள்ளனர். சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க இயலாதது. குறுகி நிற்கிறேன் என்ற முதல்வரின் அறிக்கை கண்டு நாங்கள் உருகி நிற்கிறோம். 8 இடங்களிலும் அவர்கள் பதவி விலகி மீண்டும். வி.சி.க-வுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கூட்டணி தர்மம் காக்க நாம் அமைதி காப்போம்" என்றார்.
என்ன இருந்தாலும் இப்படிப்பட்ட சிண்டிகேட் முறையால் கூட்டணி தர்மத்தின் முதுகு கூன் போட்டுவிட்டது. இதை சரி செய்ய தலைமையின் எச்சரிக்கை ஒர்கவுட் ஆக வேண்டுமல்லவா?