கஞ்சா வியாபாரிகள் சண்டை போடுகிறார்கள்:- நகரமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புகார்!

   கஞ்சா வியாபாரிகள் சண்டை போடுகிறார்கள்:- நகரமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புகார்!

   ம.பா.கெஜராஜ்,  

 எங்க வார்டில் கஞ்சா வியாபாரிகள் சண்டை போடுகிறார்கள் என்று நகரமன்ற கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் புகார் தெரிவித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரமன்றத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் துணைத்தலைவர் ரமேஷ்கண்ணா, கமிஷனர் ஏகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நியமன குழு தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த நகரமன்ற எல்லையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வெண்ட் நிர்வாகம் 38 லட்சம் வரி பாக்கியுள்ளது. இது அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனம் என்பதால் அந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக கவுன்சிலர் பேசினார்.

 அதற்கு அதிமுக கவுன்சிலர் சந்தோஷ் என்பவர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். இந்த குறிப்பிட்ட பள்ளிக்கு வரி ரத்து செய்யப்படுவதால் நகரமன்றத்துக்கு வருவாய் இழப்பீடு ஏற்படும்.

 மேலும் இவர்களைப் போல மற்ற பள்ளிக்கூட நிர்வாகங்களும் வரியை ரத்து செய்ய கோரினால் விஷயம் வேறு மாதிரி போய்விடும். ஆகவே இந்த சப்ஜெக்ட்டை கைவிட வேண்டும் என்று கோரினார். ஆகவே அது கிடப்பில் போடப்பட்டது.

  அடுத்ததாக 18 வது வார்டு திமுக கவுன்சிலர் வனரோஜா எழுந்து பயம் கலந்த சமாச்சாரம் ஒன்றை குறித்து புகார் சொல்லி பேசினார்.

 தலைவர் அவர்களே, எங்கள் வார்டுகளில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் நடமாடவே முடியவில்லை. அந்த அளவுக்கு கஞ்சா வியாபாரிகள் அங்கு மோதிக் கொள்கின்றனர் என்று சொன்னார்.

 சீரியசானா பிரச்சனையை பற்றி கவுன்சிலர் வனரோஜா பேசியதை மாமன்றத்தின் முக்கியஸ்தர்கள் அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

  அதே போல் பல இடங்களில் திருட்டுபோவதையெல்லாம் குறித்தும், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை நாங்க தான் கொண் டுவந்தோம் என்று திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களும் வாக்கு வாதம் செய்ததும், தகனமேடை பயன்படுத்தப்படாமல் உள்ளது குறித்தும், குடிநீர் தட்டுபாடு குறித்தும் கவுன்சிலர்கள் பேசிவிட்டு அமர்ந்தனர்.