ஓ.பன்னீர் செல்வத்துக்கு திருச்சி மாநாடு திருப்பு முனையாக அமையுமா?

ம.பா.கெஜராஜ்,
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. திருச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி விட்டால் இந்த பிம்பத்தை உடைத்தெறிந்து விடலாம் என்றே ஓ.பி.எஸ். கணக்கு போட்டுள்ளார்.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்தையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஆகவே வருகிற 24-ந்தேதி திருச்சியில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 80 மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ். நியமித்து வைத்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திருச்சி மாநாட்டுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தனடிப்படையில், ஆதரவாளர்களின் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களின் முகத்தில் கரியை பூசும் வகையில் திருச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக்காட்ட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிடுவதோடு, அ.தி.மு.க. பெயரை குறிப்பிட்டும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பதவியை குறிப்பிட்டும் மாநாட்டு அழைப்பிதழ் அச்சிடப்படுகின்றன.
நடக்கவுள்ள மாநாட்டில் ஆட்களை அதிக எண்ணிக்கையில் திரட்டுவதன் மூலமாக நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று வெளிகாட்ட முயல்கிறார்கள்.
அதாவது, திருச்சி மாநாடு அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். விரும்புகிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தையும் சேர்த்துக்கொண்டு ஒன்றுபட்ட அ.தி.மு.க. மாற வேண்டும் என்றும் அதுவே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வழி வகுக்கும் என்றும் டெல்லி பாரதிய ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மாநாடு பெரிய அளவில் ஓ.பி.எஸ்.ஸிக்கு கண்டிப்பாக கை கொடுக்கக்கூடும், பெரிய திருப்புமுனைக்கு இந்த மாநாடு உதவலாம்.