முதல்வர் ஆய்வில் சிக்கிய மூன்று அலுவலர்கள்:-பணிக்கு டிமிக்கி கொடுத்ததால் சிக்கல்! !

ஜி.கே.சேகரன்,
இராணிப்பேட்டையில் ரூபாய் 118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள சிறுவர் சீர்நோக்கு இல்லத்துக்கு திடீரென்று சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பணிக்கு டிமிக்கி கொடுத்திருந்த மூன்று அதிகாரிகள் குறித்து கண்டுபிடித்த அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட இராணிப்பேட்டையில் ,13.40 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 118.40 கோடி கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சுமார் 28 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 5 அடுக்குடன் பல்வேறு வசதி அதில் அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித் துறை,மாற்றுத்திறனாளி அலுவலகம்,சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, கல்வித் துறை, மின்சார துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன்,ஆர்.காந்தி ,உள்ளிட்டோரும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.
பின்னர் இராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகத்தில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கண்காணிப்பாளர், மேனேஜர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியில் இருப்பதைப்போல் பதிவேட்டில் இருந்தது? ஆனால் அவர்கள் யாரும் அங்கு இல்லை.
சமூகத்தில் குற்றங்களை புரியும் சிறார்களுக்கான விடுதியாக நடத்தப்படும் மேற்படி இல்லத்தில் பாதுகாப்பு பணி என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே நிலைதான் அதற்கான பள்ளிக்கும் உண்டு.
ஆனால் அங்கு பொறுப்பு மிக்க பணிகளில் உள்ளவர்கள் எப்போதுமே பணிக்கு வருவதில்லையாம், வாரத்துக்கு ஒருநாள் பணிக்கு வரும் போது பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்து போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்களாம்.
அந்த வகையில் தான் இன்று இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முதல்வர் வந்த போது, சிறுவர்களுக்கான அரசினர் கூர் நோக்கு இல்ல கண்காணிப்பாளர் விஜயக்குமார், துணைக் கண்காணிபாளர் கோமலா மற்றும் மேலாளர் மணிகண்டன் ஆகியோர் பணிக்குவரவில்லை என்பதை முதல்வரின் திடீர் விசிட்டின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு டிமிக்கி கொடுத்த அரசு அலுவலர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.