சரத்பவார் அவரது ராஜினாமா அறிவிப்பை மாற்றிக்கொள்ள மாட்டார்!

சரத்பவார் அவரது ராஜினாமா அறிவிப்பை மாற்றிக்கொள்ள மாட்டார்!

ரவி ஜார்ஜ்,

 வட இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி எனவும், 2024-ல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கிங்மேக்கராக திகழுவார் என்று பேசப்பட்டவருமான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அதிரடியாக ஒரு முடிவை வெளியிட்டு தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

 'புதிய தலைமுறையினர் கட்சியையும், கட்சி செல்ல நினைக்கும் பாதையையும் வழிநடத்த வேண்டிய நேரம் இது. தலைவர் பதவிக்கான காலியிடத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்வதற்காக கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்' என சரத் பவார் கூறி, தனது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் திடீரென அறிவித்தார். வயது முதிர்வை காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

 அவரது ராஜினாமாவை பெரும்பாலான தொண்டர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அவரே தலைவராகத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.   

 ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் அங்கிருந்து செல்லமாட்டோம் என்றும் பிடிவாதமாக இருந்தனர்.  இதையடுத்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் உறவினர் அஜித் பவார் ஆகியோர் சரத் பவாரை சந்தித்து ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

 அதே நேரத்தில் சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற மாட்டார் என்று அஜித்பவார் கூறினார்.தொண்டர்கள் மத்தியில் அஜித்பவார் பேசியதாவது:- சரத்பவார் தனது முடிவை பற்றி சிந்திக்க அவருக்கு இன்னும் 2 முதல் 3 நாட்கள் தேவைப்படும். இதனால் நீங்கள் வீட்டுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். சரத்பவாரின் முடிவால் அதிர்ச்சி அடைந்து கட்சி நிர்வாகிகள் யாரும் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றார்.

  மேலும், அஜித்பவார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-  சரத்பவார் கடந்த சில நாட்களுக்கு முன் தான் மாற்றம் தேவைப்படுவது குறித்து பேசியிருந்தார். வயது, உடல்நலனை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்து இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நேரத்தை பொறுத்து ஒவ்வொருவம் முடிவு எடுக்க வேண்டும். சரத்பவார் முடிவு எடுத்துவிட்டார். அதை அவர் திரும்ப பெறமாட்டார். அவர் தனது முடிவை (மே 1-ந் தேதி) அறிவிக்க இருந்தார். ஆனால் மும்பையில் நடந்த மகாவிகாஸ் அகாடி பொதுக்கூட்டம் காரணமாக அவர் முடிவை நேற்று அறிவிக்கவில்லை என அந்த பேட்டியில் அஜித்பவார் தெரிவித்திருந்தார்.