இளம் பெண்ணுக்காக ஜொல்லுவிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் கைது!

ஜி.கே.சேகரன்,
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் பயணம் செய்த பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு பெற்ற பெட்டியில் பயணம் செய்த பெங்களூர் பகுதியைச் சார்ந்த சௌஹான் குமார் மனைவி வாசவி சௌஹான்(38) பயணம் செய்தார்.
அப்போது ஜோலார் பேட்டைக்கும், காட்பாடிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஓடியப்பண் நகர் பகுதியைச் சேர்ந்த சி. ஆர்.பி.எப். வீரர் சுரேஷ்(38) என்பவர் அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சுரேஷை ஒப்படைத்தனர்.
சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டை ரயில்வே எல்லை என்பதால் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை சிஆர்பி வீரர் சுரேஷ் மிரட்டும் பாணியிலும் போலீசாரின் முன்னிலையில் பேசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.