ஆளுநரை மையப்படுத்தி சர்ச்சை தீர்மானம் கோரும் விசிக!

ஆளுநரை மையப்படுத்தி சர்ச்சை தீர்மானம் கோரும் விசிக!

ம.பா.கெஜராஜ்,

 தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் ஆதிக்கம் செய்வதாக கூறப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்றாற்போல், நீட் தேர்வு விலக்கு கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்காமல், மாதக்கணக்கில் தமது மாளிகையிலேயே வைத்திருந்தது, சில மசோதாக்களை கிடப்பில் போட்டிருப்பதற்கான காரணத்தை மாநில அரசுக்கு சொல்வதற்கு முன்பே அதுகுறித்து ஊடகங்களுக்கு தாமாக முன்வந்து பேட்டி அளித்தது என்பன போன்ற காரணங்களாலும் ஆளும் தரப்பு ஆளுநரிடம் உரசல் இருந்தது.

   அதன் வெளிபாடாக மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரி. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த ஏப்ரல் மாதம் கவனஈர்ப்பு நோட்டீஸ் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது மாளிகையில் அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

 அப்படியிருக்க கடந்த 7 ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பேசிய ஆளவநர் ரவி, "திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. ஆனால் அதனை சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர்" எனப் பேசியது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 ஆளுநரின் மேற்படி பேச்சை, திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடுமையாக சாடியுள்ள நிலையில், ஆளுநர் திரும்பப் பெற கோரி, விரைவில் கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சியான விசிக வலியுறுத்தி உள்ளது.

  இதுதொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரே பாரதம் ஒரே பண்பாடு என்ற பெயரில் கருத்தரங்கத்தை ராஜ்பவனில் நடத்துகிறார் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுனர் மாளிகை என்பது கொள்கைகளை செயல்படுத்தும் அலுவலகமல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனை,உரிமைகளை பாதுகாக்க தங்கி பணி செய்யும் இடம்.

ஆனால் ஆளுனர் அவர்கள் அதை தவிர மற்ற சங்கத்துவ பணிகளை செய்வது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும். ஆகவே, வரும் 17 ம்தேதி கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும்" என வன்னி அரசு அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்