சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடி! முதலமைச்சர் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் உதயநிதி தகவல்!

சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடி! முதலமைச்சர் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் உதயநிதி தகவல்!

ஜி.சாந்தகுமார்,

சென்னை மாநகராட்சி நிகழ்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

  அப்போது அவர் பேசியதாவது: வேகமாக நகரமயமாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக சென்னையும் சென்னையின் மக்கள் தொகையும் இன்று விரிவடைந்து செல்கிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப சென்னை மாநகராட்சி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய தேவைகள் அனைத்தும் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது.

 முதல்வரின் கனவுத் திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் சென்னையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

 அடையாறு கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகளும் சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான பல்வேறு திட்டங்களை சென்னைக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

 மழை வெள்ள நேரத்தில் பலர் எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்தாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் மக்கள் பணியை கருத்தில் கொண்டு அனைத்துப் பகுதிகளையும் சரிசெய்த பெருமை நம் சென்னை மாநகராட்சிக்கு உண்டு.

 சென்னையை மீட்ட கையோடு சிறிதும் ஓய்வெடுக்காமல் சாலைப் பணிகள் குடிநீர் இணைப்பு கழிவுநீர் அடைப்பு தூய்மைப் பணி உள்ளிட்ட தங்களது பணிகளில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மீண்டும் சிறப்பாக செய்யத் தொடங்கிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது என அவர்  பேசினார்.