'பாரத் மாதா கி ஜே' சொல்ல வற்புறுத்திய பெண் அமைச்சரை கலாய்த்த மாணவர்கள்!

உ.சசிகுமார்,
இளைஞர்கள் 'பாரத் மாதா கி ஜே' சொல்ல மறுத்ததால் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி கடுப்பானார்.
கேரளாவில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி..பி அமைப்பினர், 'அவேக் 2024' என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். விவேகானந்தர் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 3ம் தேதி கோழிக்கோடு அருகே இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ஏபிவிபி நிர்வாகிகள், ஏபிவிபி விளையாட்டுப் பிரிவான கேலோ பாரத் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ''இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான் உள்ளனர்.
''கேரள மாநிலத்தின் ஆளுநரான ஆரிப் முகமது கான் என் மனம் கவர்ந்த தலைவர்களுள் ஒருவர். ராஜீவ் காந்தி மந்திரி சபையில் இருந்த அவர், ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராஜினாமா செய்தார். என்று பேசிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷமிட்டதுடன், அரங்கில் இருந்தவர்களையும் அதே போல் கோஷமிட சொன்னார்.
ஆனால் இளைஞர்கள் அந்த கோஷத்தை ஏற்கவில்லை. ஆகவே இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ''நீங்கள் பலரும் கைகட்டி அமைதியா அமர்ந்திருக்கிறீர்கள். பாரத் மாதா எனக்கு மட்டுமா தாய்? உங்களுக்கும் தாய் தான். இதுல ஏதாவது சந்தேகம் இருக்கா, சந்தேகம் இல்லைதான? உற்சாகம்னா அதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு, மீண்டும் 'பாரத் மாதா கி ஜே' என்கிறார்.
ஆனால் இளைஞர்கள் அந்த கோஷத்தை ஏற்காமல் அமைதியாகவே இருந்தனர்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அமைச்சர் என்ன பிரச்சினை உங்களுக்கு?' என்று கேட்டவாறே மீண்டும், 'பாரத் மாதா கி ஜே' என்றார். அப்போதும் அரங்கத்தில் அமைதிதான் நிலவியது
இதனால் கடுப்பான அமைச்சர், அரங்கில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை எழுந்து நிற்குமாறு கூறிவிட்டு அவரிடம், ''உங்களிடம் நேரடியாக கேட்கிறேன் பாரத் மாதா உங்கள் தாய் இல்லையா? நீங்கள் அரங்கை விட்டு வெளியேறுங்க. நாடு குறித்து பெருமைப்படாமல் நாட்டைப் பற்றி பேசாமல் இருப்பவர் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க தேவையில்லை,'' என்று வெறுப்பாக பேசினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாலர்களிடம் பேசிய அந்த அமைச்சர், இளைஞர்கள் கூச்சத்தின் காரணமாக சொல்லவில்லை என்று சமாளித்துவிட்டு நகன்றார்.
'பாரத் மாதா கி ஜே' என்று கூறுமாறு இணை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வற்புறுத்துகிறார், மறுத்தவர்களை வெளியில் அனுப்பியுள்ளார் என்று இடதுசாரிகளும், காங்கிரசாரும் அந்த பெண் அமைச்சரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.