ஜார்கண்ட் புதிய முதல்வர் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார்!

ம.பா.கெஜராஜ்,
ஜார்கண்ட் புதிய முதல்வர் சம்பாய் சோரன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் முதல்வர் பதவியை¢ ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார். இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பிப்-5 இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், அமலாக்கத்துறை காவலில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் பங்கேற்றார். அதற்காக அவர் சட்டமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் சம்பாய் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
80 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில்,47 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாகவும் 29 எம்.எல்.ஏ.க்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
மகா கூட்டணி ஆட்சியில், சம்பாய் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்களும், ஆர்ஜேடி மற்றும் சிபிஐ (எம்எல்) கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். அதாவது இந்த கூட்டணிக்கு மொத்தம் 48 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர், இதில் பாஜகவுக்கு மட்டும் 26 உறுப்பினர்களும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரின் பிரிவைச் சேர்ந்த ஒருவரும் உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது.