திருவிக அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா வீட்டில் குறிப்பானை ஒட்டப்பட்டது!

G.Balaguru,
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா வீட்டில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, 21 நாட்களுக்குள் பதில் அளிக்கக் கோரி குறிப்பானை ஒட்டப்பட்டது.
அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா, அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்த விளக்கம் கேட்டு குறிப்பானையை கல்லூரி கல்வி தஞ்சை மண்டல இணை இயக்குநர் தனராஜன், வருவாய் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் வழங்க இன்றைய தினம் வந்த பொழுது, கீதா இல்லத்தில் இல்லாதது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் இயலாத சூழ்நிலையில், அவரது வீட்டின் கதவில் குறிப்பானை ஓட்டப்பட்டது.
அதில், அவர் கல்லூரி கல்வி இயக்குநராக பணியில் இருந்த போது முறைகேடாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டது குறித்தும், கல்லூரிகளுக்கு ஜெராக்ஸ் மிஷின் போன்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டது குறித்தும், அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்களை விசாரிப்பதற்காக காரைக்குடிக்கு அழைக்கப்பட்டபோது அதனை நிராகரித்ததற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்து 21 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க அந்த குறிப்பானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது கல்லூரி கல்வி தஞ்சை மண்டல இணை இயக்குநர் தனராஜன் மற்றும் திருவாரூர் வட்டாட்சியர் செந்தில் குமார், காவல்துறையினர் மற்றும் திருவிக கல்லூரி பொறுப்பு முதல்வர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.