மாற்று பேருந்து அனுப்ப தாமதம்! ஆம்பூரில் பயணிகள் மறியல்! கார் ஓட்டிய மாணவரால் பயங்கர விபத்து!

மாற்று பேருந்து அனுப்ப தாமதம்! ஆம்பூரில் பயணிகள் மறியல்! கார் ஓட்டிய மாணவரால் பயங்கர விபத்து!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூரில் நள்ளிரவில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி

 ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் பயந்து பயணித்து வந்ததாகவும், இரண்டு மணி நேரமாகியும் மாற்று பேருந்து அனுப்பாமல் அலைகழித்ததாகவும் கூறி பயணிகள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   நேற்று முன்தினம் நள்ளிரவில், வேலூரில் இருந்து அரசு விரைவு பேருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் வெங்கடேசன் என்கின்ற காளியப்பன் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது பேருந்து பழுதாகி  நின்றது.

 இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து ஓட்டுநர் டிப்போவுக்கு தகவல் அளித்திருக்கிறார். பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும், மாற்று பேருந்துமனுப்பிவைக்கப்படவில்லை.

  நள்ளிரவு நேரத்தில் பேருந்து சாலையில் நின்றதால் அங்கு விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது  ஓட்டுநர் குடிபோதையில் பேருந்து இயக்கி வந்ததாகவும், தாங்கள் பயத்துடன் பயணித்து வந்ததாக கூறினர். 

  இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலையில் நின்று கொண்டிருக்கிறோம், மாற்று பேருந்து அனுப்பாமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி பேருந்து நடத்துனர் கிருஷ்ணமூர்த்தியிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

  பயணிகளின் போராட்டத்திற்கு பின்னர் ஆம்பூர் பணிமனையில் இருந்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் நள்ளிரவில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் கார் ஓட்டியதால் விபத்து.

 வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து.ஒருவர் பலி, 4 பேர் காயம்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில், ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேருடன் மற்றொரு மாணவன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.

  அந்த காரை 11 ஆம் வகுப்பு மாணவன் ஓட்டி சென்றார்.

  அப்போது கார் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலம் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

   இதில் காரில் பயணம் செய்த10ஆம் வகுப்பு மாணவன் அதனான் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ராஷித்(17), ஈஹான்(16), தக்வீம்(16),தல்ஹா(16) ஆகிய 4 மாணவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலிசார் விபத்தில் பலியான மாணவன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.