கோரிக்கைகளை பட்டியலிட்ட ஆசிரியர்கள் இயக்கம்! கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டம்!

கு.அசோக்,
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் டிட்டோ ஜாக் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் கலந்து கொண்டு கண்டன சிறப்பு உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தொடக்க கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைத்திட வேண்டும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வித்துறையினர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவினருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.