எங்கள் வீட்டு கதவை நாங்களே திறந்து வைத்திருப்போம்! அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

கு.அசோக்,
பெரிய பெரிய பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் தமிழக பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கின்றது என கூறும் போது, தமிழகம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது என கூற பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பொருளாதார வல்லுநரா - அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானால் எங்கள் வீட்டிற்கு வரலாம் கதவை திறந்தே வைப்போம் - காட்பாடி பிரம்மபுரத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் பாலாறு பாண்டியன் மடுகு இணைப்பை சீரமைக்கும் பணிகளுக்காக நீர் வளத்துறையின் சார்பில் ரூ.6.32 கோடி மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இப்பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் துவக்க விழாவானது தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனால் துவங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மண்டல குழுதலைவர் புஷ்பலதா உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கர்நாடக தமிழகத்திற்கு தண்ணீரை தரும். நடிகர் விஜய் அரசியல் துவங்கியது என்பதில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அரசியல் கட்சி துவங்கலாம்.
பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளது என கூற அவர் யார் பொருளாதார வல்லுநரா? பெரிய பெரிய பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் தமிழகத்தின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டு கதவை தட்டலாம் என அண்ணாமலை பேசியிருக்கிறார். அந்த கஷ்டம் கூட அவர்களுக்கு வேண்டாம், நாங்களே கதவை திறந்து வைத்துவிடுகிறோம்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போது ஒன்றும் கூற முடியாது என கூறினார்.