கஞ்சா விற்கும் பெண் வியாபாரிகள்!140 கிலோ கஞ்சா பறிமுதல்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
140 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பான கும்பல் சுற்றி வளைக்கப்பட்டள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கஞ்சா புழக்கத்திலிருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்தும் இளைஞர்கள் பலரும் இதற்கு அடிமையாகியுள்ளனர்.
இந்த நிலையில்தான், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கை மாறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், எஸ்.ஐ செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் அவரின் மனைவி ஜானகி (35) என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வரவழைத்து மொத்தமாக தன் வீட்டில் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்ததைக் கண்டுபிடித்தனர்.
ஜானகியைப் ஃபாலோ செய்த தனிப்படை போலீஸார், கஞ்சாவைக் கைமாற்றும்போது கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணைக்காக திருக்கோகர்ணத்திலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மேலும், பண்டல் பாண்டலாகக் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக, ஜானகி வசமிருந்த 140 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. ஜானகியைக் கைது செய்ததோடு, அவருக்கு உதவியாக இருந்த மேலும் சிலரையும் திருக்கோகர்ணம் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``புதுக்கோட்டையிலிருந்து வெளியூர்களுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரிலேயே தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தினோம்.
மதுரையைச் சேர்ந்த செல்வி, பாலு என்பவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஜானகியிடம் ஒப்படைக்கும் பணியைச் செய்திருக்கின்றனர். திருச்சிக்குச் செல்லும் ஜானகி, திருச்சியிலிருந்து, புதுக்கோட்டைக்குக் கஞ்சாவைக் கொண்டுவந்து தனது வீட்டிற்குள் பதுக்குகிறார்.
அதன்பின்பு வியாபாரிகளைத் தொடர்புகொண்டு திருக்கோகர்ணத்திலிருந்து வெளியூர்களுக்குக் கஞ்சாவைக் கைமாற்றி வந்திருக்கின்றனர். அதோடு, ஜானகியின் கணவர் அய்யப்பன், புதுக்கோட்டையைச் சேர்ந்த வனிதா என்பவரின் உதவியோடு, கஞ்சாவைச் சில்லறை விற்பனை செய்துவந்திருக்கிறார்.
ஜானகி கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, தலைமறைவான மற்றவர்களையும் பிடித்து விசாரணை செய்து கஞ்சா தொடர்பு துண்டிக்கப்படும் என்றனர்.ஸ்