ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் தாய் ஆக்கிரமிப்பு செய்த இடம் அதிரடி அகற்றம்!

விநோத்,
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில், வருவாய் துறையின் புல எண்: 109 /7ல் வெள்ளை குட்டை அமைந்துள்ளது. சுமார் 6 ஏக்கரில் வருவாய் துறையினரால் குட்டை நிலம் என வகைப்படுத்தப்பட்ட இந்த நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து எட்டு வீடுகள் ஒரு கடை கட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், நீர்நிலையில் செய்யப்பட்டிருக்கிற ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா 45 என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார்.
லப்படியிருக்க மேற்படி பகுதி நீர்நிலை என்பது உறுதி செய்யப்பட்டதால் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத்பேகம் தலைமையிலான வருவாய் துறையினர் மண் அள்ளும் இயந்திரத்துடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர். திருத்தணி தாசில்தார் வெண்ணிலா உடனிருந்தார்.
இதில் குட்டையை ஆக்கிரமித்து தமிழக அரசின் முதன்மை செயலர் ஐ.ஏ.எஸ். அபூர்வாவின் தாய் அருணோதயா இரண்டு வீடுகள் கட்டி உள்ளார். அவற்றில் 600 சதுரடி வீடு நேற்றும் இடிக்கப்பட்டது. 1100 சதுரடியுள்ள மற்றொரு வீடு இன்றும் இடிக்கப்பட்டது.
அதேபோல் தொழுதாவூர் ஊராட்சி தலைவர் அருள்முருகன் கட்டியிருந்த 1 800 சதுரடி வீடு இடிக்கப்பட்டது. தவிர ஆறு வீடுகள் ஒரு கடை மட்டும் அரசு கட்டடங்களான ரேஷன் கடை ஊராட்சி அலுவலகம் ஆகியவை இடிக்கப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையிலான 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சொத்து சுகம் உள்ளவர்களே இப்படி ஆக்கிரமிப்பு செய்தால் எப்படிங்க என்கிறார்கள் வீடில்லா மக்கள்.