ஆணவக் கொலையில் பரபரப்பு தீர்ப்பு!

ஆணவக் கொலையில் பரபரப்பு தீர்ப்பு!

   அ.அரவிந்தன்,

கடந்த18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் மருது பாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

   இதனை எதிர்த்து தண்டிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு விசாரித்தது.

  அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு பிறகுதான் கொலை வழக்காக மாற்றப்பட்டது என்றும் சம்பத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பட்டியலினத்தவரும் இருப்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவுசெய்தது பொருந்தாது எனவும் வாதிடப்பட்டது.

நடந்தது ஆணவக் கொலை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

 என்னதான் வழக்கு அது.

   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் முருகேசன்.  இளங்கலை பொறியாளர் படிப்பு படித்த இவர் பட்டியல் சாதியை சேர்ந்தவர்.  இவரும் அதே பகுதியில் உள்ள இடைநிலை சாதியை சேர்ந்த துரைசாமி என்பவது மகள் கண்ணகி என்பவரும் காதலித்தனர்.

   இருவரும் 2003 மே 5ம் தேதி கடலூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

  முருகேசன் - கண்ணகி திருமணம் செய்துகொண்ட விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததால் அப்போதைய விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை, காதல் கணவன் முருகேசன் தங்க வைத்திருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்கள் 2003 ஜூலை 8ஆம் தேதி அன்று முருகேசனை பிடித்து வைத்தனர். மேலும் விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள் முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர்.

பின்னர் முருகேசன் , கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு , காது வழியாக விஷம் செலுத்தி அவர்களைக் கொலை செய்து , சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.

முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில்

 விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன் , கண்ணகி ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பினரையும் கைது செய்தனர்.

முருகேசன் - கண்ணகி இருவரையும் சாதி ஆணவத்தில் கொலை செய்திருக்கலாம். எனவே இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தின.

இதையடுத்து, கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை சி.பி.ஐ. எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனை விசாரித்த சி.பி.ஐ. அதே ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

 கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு வழங்கினார்.

 கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது ஆய்வாளராக இருந்த செல்லமுத்து (தற்போது ஓய்வு பெற்ற டிஎஸ்பி), உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் (தற்போது ஆய்வாளர்) உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் அய்யாச்சாமியும் குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

 இந்த வழக்கின் மீதான அப்பீலில் தான் தற்போதைய தீர்ப்பு வெளியானது.

குறிப்பு:- 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி உத்தமராஜா அவர்கள் கடந்த 11.11.2001 ஆம் தேதியன்று சங்கராச்சாரியர் எனப்படும் ஜெயேந்திரரை ரிமாண்ட் செய்தவர் ஆவார்.