நர்சுகளுடன் உல்லாச பயணம்:- மகனை வைத்தியம் பார்க்க வைத்த அரசு மருத்துவர் சஸ்பெண்டு!

நர்சுகளுடன் உல்லாச பயணம்:- மகனை வைத்தியம் பார்க்க வைத்த அரசு மருத்துவர் சஸ்பெண்டு!

  ச.மைக்கேல்,

  ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவராக குருப்பநாய்கன் பாளையத்தை சேர்ந்த தினகரன் (57) உள்ளார். இவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக், வினோத்குமார், சரவணக்குமார், சண்முகவடிவு ஆகிய மருத்துவர்களும், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருந்தாளளுனர்கள் பணி செய்து வருகின்றனர்.

 அப்படியிருக்க, தலைமை மருத்துவர் தினகரன் கடந்த ஞாயிற்றுகிழமை முறையாக விடுப்பு எடுக்காமல் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

 போகிற போக்கில் மருத்துவம் படித்துவிட்டு வீட்டு ஹவுஸ் சர்ஜனாக உள்ள தமது மகன் அஸ்வின் (24) என்பவரை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறி சென்றுள்ளார்.

 அஸ்வினும் காலை முதல் இரவு வரை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

 அதில், ஞாயிற்றுக்கிழமை இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  அப்போது முருகேசன் தலைமை மருத்துவர் குறித்து விசாரித்தபோது அவர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும், தான் பவானி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியில் உள்ளதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

   ஆக, அஸ்வின் அரசு மருத்துவராக பணி செய்யவில்லை என்பதும் தலைமை மருத்துவர் தினகரன் மகன் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளிவரவே கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

   இதற்கிடையில் தலைமை மருத்துவர் தினகரன் ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முன்னிலையில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்தார்.

   அவரது விளக்கத்தை ஏற்காத இணை இயக்குநர் கோமதி நேற்று கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செவிலியர்கள், பணியாளர்கள், தலைமை மருத்துவர் தினகரன் உள்பட அனைவரிடமும் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதில்    தலைமை மருத்துவர் தினகரன், அவரது மகனை சிகிச்சை பார்க்க வைத்தது உறுதி செய்யப்பட்டது.

 அதேபோல் சில மருத்துவர்கள் பணியில் இல்லாததும் தெரிய வந்தது. இந்த விசாரணை அறிக்கையை மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மகனை சிகிச்சை பார்க்க வைத்த கவுந்தப்பாடி தலைமை மருத்துவர் தினகரன், பணி நேரத்தில் பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.