மேல்மலையனூர் தேர் கவிழ்ந்தது! இருவர் பலி:- அபசகுணமா!

ம.முருகன்,
மேல்மலையனூரில் தேர்கவிழ்ந்து இரண்டு பேர் உயிரிழந்தனர். இது அபசகுணம் என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
மாசிப்பெருவிழாவையொட்டி நடந்த இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்காக கலந்து கொண்டனர். தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், சுட்டெரித்த வெயிலில் மயங்கி விழுந்து ஒருவரும் பலியாகினர்.
வேலூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் விநாயகம்(வயது 60). இவர் தேரோட்டத்தை காண்பதற்காக மேல்மலையனூருக்கு வந்தார். தேரை வடம்பிடித்து இழுத்தபோது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக்கொண்டனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய விநாயகம், கீழே விழுந்தார். இதை கவனிக்காத பக்தர்கள், அவரை மிதித்து சென்றனர். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் தேரோட்டத்தின்போது வெயில் அதிகமாக இருந்ததால் மேல்மலையனூர் அருகே உள்ள கோடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(52) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதனால் கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
மேற்படி 2 பேரது உடலையும் வளத்தி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் வள்ளிமலை கோவிலின் தேர் கவிழ்ந்து ஒருவர் பலியானார். அப்போது அது அபசகுணமாக பார்க்கப்பட்டது.
அதற்கேற்றார் போல் தேரை இழுத்து ஊர்வலத்தை துவக்கி வைத்த ஜெயேந்திரர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
விபத்து விபத்துதான் இதுல போய் என்ன அபசகுணம் என்று மற்றொறு சாரார் சொல்கிறார்கள்.