மருத்துவக் கழிவுகளை ரோட்டில் கொட்டிய மருத்துவமனைக்கு லட்ச ரூபாய் அபராதம்!

க.பாலகுரு,
நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் அதிரடி.
திருவாரூர் அருகே, தண்டலை கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் தொடர்ந்து மருத்துவ மனை கழிவுகள் கொட்டப்பட்டு அவ்வப்போது எரித்து அழிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்படும் இந்த மருத்துவ கழிவுகளால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதற்கு பல்வேறு தரப்பினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மருத்துவ கழிவுகளை இரவில் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படுவதை அப்பகுதி மக்கள் புகைப்படம் எடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து தண்டலை ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்த போது பல ஆண்டுகளாக இந்த பகுதியில் தொடர்ந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதிரடியாக ஒரு லட்ச ரூபாய் தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.