திருடிய வீட்டுக்கு தீ!

திருடிய வீட்டுக்கு தீ!

கு.அசோக்,

இராணிப்பேட்டை அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்ற நேரத்தில் மர்மநபர்கள் வீட்டை உடைத்து ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளை அடித்து விட்டு வீட்டை கொளுத்தி விட்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  இராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு புதுத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி, இவர் தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார்

இவரது மனைவி ராணி தற்காலிக கிராம தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார்.

 இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று ராணி தனது உறவினர் இல்லத்திற்கு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

   மேலும் கந்தசாமி வழக்கம் போல் இரவு தனியார் கம்பெனிக்கு இரவு காவலாளி பணிக்கு சென்று இருந்த நிலையில் வீட்டின் யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின்  முன்பக்கம் கதவின் பூட்டை உடைத்து வீட்டினில் நுழைந்து பிரோவில்  வைக்கப்பட்டிருந்த சுமார் 8 சவரன் தங்க நகை மற்றும் 20000 ரூபாய் ரொக்க பணத்தினை   கொள்ளையடித்துள்ளனர்.

  பின்னர் அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

  பின்னர் வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டின் உரிமையாளரான ராணி கந்தசாமி மற்றும் சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்த வீட்டினை பார்வையிட்டு தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  சிப்காட் போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.