சூதாடுவதற்காக குழந்தையை விற்ற தந்தை! கண்கலங்கிய போலிசார்!மூவர் கைது!

பெ.விஜயகுமார்,
சூதாடுவதற்கு பணம் இல்லையாம், ஆகவே தன்னுடைய குழந்தையை விற்ற தந்தை தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேலும் குழந்தையை பணத்துக்காக வாங்கியவர்களும் சிக்கினார்கள்.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி கைருன்னிஷா (28). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைருன்னிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அப்துல் சலாம், தனது நண்பரான தென்னூரை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது உறவினரான தொட்டியம் பகுதியை சேர்ந்த சந்தனகுமார் என்பவருக்கு குழந்தையை விற்பனை செய்தவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதற்காக 10-க்கும் மேற்பட்ட தவணைகளாக சிறுக சிறுக ரூ.80 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கு மனைவி கைருன்னிஷாவும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அப்துல் சலாம் குழந்தையை விற்று பெற்ற பணத்தில் மது அருந்தியும், சூதாட்டத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆகவே கைருன்னிஷா குழந்தையை தன்னிடம் மீண்டும் தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது, குழந்தை மீண்டும் கிடைக்காது என அப்துல் சலாம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கைருன்னிஷா, இதுகுறித்து கடந்த 22ஆம் தேதி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குழந்தை தொட்டியம் சந்தனகுமார் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் குழந்தையை மீட்ட போலீசார், அதனை தாயிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, குழந்தை விற்பனை தொடர்பாக தந்தை அப்துல் சலாம், அவரது நண்பர் ஆரோக்கியராஜ் மற்றும் சந்தனகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து, மூவரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து, மூவரும் மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த குழந்தையை விற்ற அப்துல் சலாம் சூதாட்டத்துக்கும், போதைக்கும் அடிமையாக இருந்துள்ளார். இதனால் அவரை வருமை வாட்டிய நிலையில் இப்படி குழந்தையை விற்றுள்ளார்.
இந்த வழக்கில் பணியாற்றிய போலிசார் கணகலங்கியபடியே மீட்டுள்ளனர். ஏனெனில் குழந்தையை வாங்கிய சந்தனகுமாரின் மனைவி, குழந்தையை திருப்பித்தர அடம்பிடித்திருக்கிறார்.
ஒரு பக்கம் பெத்த தாய் குழந்தையை மீட்டு தர கெஞ்சி கூத்தாட, வாங்கிய தாயோ காலில்கூட விழுகிறேன் தயவு செய்து குழந்தையை நானே வளர்த்துக் கொள்ள அனுமதியுங்கள் என்று கதறி காலில் விழ, ஒரே பாசப் போராட்டமாக இருந்தது, இடையே பாவம் போலிசார் கண்கலங்கினர். இருப்பினும் அவர்கள் கடமையை ஆற்றி குழந்தையை மீட்டு பெத்தவரிடம் ஒப்படைந்தனர்.