தாதாவின் மனைவியை வெட்டிச் சாய்த்த சிறுவர்கள்?

தாதாவின் மனைவியை வெட்டிச் சாய்த்த சிறுவர்கள்?

   க.முகில்,

  காந்திமதி என்கிற பெண், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மிகப்பெரிய ரவுடியான அவரது கணவரை பிப்ரவரி மாதம் போலிசார் என்கவுன்டர் செய்த நிலையில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று சிறார்கள் உள்பட நால்வரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

  இது பற்றின விவரம் வருமாறு,  

 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட குப்பன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி காந்திமதி.

 இவரது கணவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அன்று கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து, திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்கிற வீரங்கன் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

  இதையறிந்த காவல் துறையினர், கிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி பிடித்தனர்.

  பின்னர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணனை மட்டும் மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றனர்.

 அப்போது கிருஷ்ணன், உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற போது, என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் கிருஷ்ணனின் மனைவி காந்திமதி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு அவர் வீட்டுக்கு அருகேயுள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

 அப்போது அங்கு வந்த நான்கு பேர், காந்திமதியை வழிமறித்து வெட்டிவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்.

 படுகாயமடைந்த காந்திமதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல்லும் வழியில்  உயிரிழந்தார்.

  காந்திமதி கொலை செய்யப்பட்டத்தை அடுத்து, டி.எஸ்.பி. அசோகன் இந்த வழக்கை விசாரணை செய்தார். திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

   விசாரணையில், கொலை செய்யப்பட்ட காந்திமதி என்பவருக்கும் சுப்புராயலு நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் தவறான உறவு இருந்தது தெரியவந்தது.

  மேலும் அரவிந்தன் மற்றும் காந்திமதிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது என போலிசார் சொல்கிறார்கள்.

  மேலும், அரவிந்தன் என்பவரால் தனக்கு தொல்லை இருப்பதாக காந்திமதி   கணவரின் நண்பர்கள் சிலரிடம் கூறியதாக தெரிகிறது. இதனையறிந்த அரவிந்தன், காந்திமதி வசிக்கும் சுப்புராயலு நகர் பகுதியை சேர்ந்த மூன்று சிறார்கள் உதவியுடன் காந்திமதியை திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரிந்ததாம்.

 இது போன்ற கொலை சம்பவங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது காவல் துறை அதிகாரிகளின் அச்சமாக இருக்கிறது.

  ஏனெனில் காந்திமதியை கொலை செய்தது மூன்று சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.