கடமை தவறிய மருத்துவமனைக்கு 3-லட்சம் தண்டம் விதித்த நீதிமன்றம்!

க.பாலகுரு,
தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றபோது உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் என்பவரது இறப்பு சான்றிதழ், டிஸ்சார் சம்மரி வழங்காத தனியார் மருத்துவமனையை ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே செருவளுர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் விக்னேஷ் வயது 24. இவர் கடந்த 2017 ஏப்ரல் 22 ஆம் தேதி நன்னிலம் அருகே தென்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் விக்னேஷ் உள்பட பலருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தீக்காயம் ஏற்பட்ட விக்னேஷ் திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள தனியார் நவஜீவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் 35 தினங்கள் சிகிச்சை பிறகு 2017 மே 26 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்தது தொடர்பாக இறப்புச் சான்றிதழ், டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவை கொடுக்கப்படவில்லை. இறந்த விக்னேஷின் குடும்பத்தினர், நவஜீவன் மருத்துவமனையில் முறையிட்டும் நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை.
இது தொடர்பாக விக்னேஷின் தந்தை அன்பழகன, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணையை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, நவஜீவன் மருத்துவமனையில் மருத்துவ விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. விக்னேஷ் இறந்தது தொடர்பான இறப்புச் சான்றிதழ், மருத்துவ அறிக்கை (டிஸ்சார் சம்மரி) ஆகியவை வழங்கப்படவில்லை.
மேலும் இதுபோன்ற விபத்துகளில் ஒருவர் அனுமதிக்கப்படும் போது, அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்த வகையில் விக்னேஷ் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டது குறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.
எனவே, மருத்துவ விதிமுறைகள் பின்பற்றப்படால், சேவை குறைபாடுடன் செயல்பட்ட நவஜீவன் மருத்துவமனை இழப்பீடாக ரூ.3 லட்சமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரமும், இறந்த விக்னேஷின் தந்தைக்கு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.