ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம்! மலையேறிய அலுவலர்கள்!

இம்மி,
ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட பட்டியலின பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்த நபர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்த ஊர் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்கள் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத்திற்குட்ப்பட்ட பனங்காட்டேரி மற்றும் காமனூர்தட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலை வாழ்மக்கள் வசித்து வருகின்றனர்..
இந்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியிற்கு இந்துமதி பாண்டியன் என்ற பட்டியலினப் பெண் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
ஆகவே இந்து மதி பாண்டியன் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்படியிருக்க, நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினப்பெண் பதவியேற்க கூடாது என நாயக்கனேரி பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நாயக்கனேரி ஊராட்சி மன்ற ஒன்றிய குழு வார்டு எண் 24 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைப்பெற்று அதில் சுயேட்சை வேட்பாளர் இந்துமதி காசி என்பவர் வெற்றி பெற்றார்.
அதாவது ஏற்கனவே அன்னபோஸ்டாக ஜெயித்த இந்துமதி பாண்டியனுக்கும், தற்போது வென்றுள்ள இந்துமதி காசிக்கும் முன்னாள் தலைவர் சண்முகம் என்பவர் தலைமையிளான டீம் தான் தேர்தல் வேலைகளை செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற பிரிவினர் சண்முகம் அண்ட் டீமை ஒதுக்கி வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி நாயக்கனேரி மற்றும் காமனூர்தட்டு பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்டோரை நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகத்தை சேர்ந்த முன்னாள் தலைவர் சிவக்குமார் என்பவர் ஒதுக்கி வைத்துள்ளதாகவும்,
மேலும் தங்களிடம் பால் வாங்ககூடாது எனவும், விவசாய பணிகளில் ஈடுப்பட கூடாது எனவும் ஊரில் இந்துமதிக்கு ஆதரவு தெரிவிப்போரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாயக்கனேரி காமனூர் தட்டு பகுதி சேர்ந்த நபர்கள் நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேற்படி புகார் எழுந்த நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலிசார் நாயக்கனேரி மலைக்கு நேரடி விசாரனைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள்.