டுபாக்கூர் நியமண ஆணை! மூவர் கைது....எஸ்.பி.பாராட்டு!

டுபாக்கூர் நியமண ஆணை! மூவர் கைது....எஸ்.பி.பாராட்டு!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமண ஆணை வழங்கி ரூபாய் 2,50,000/- பணத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

  தூத்துக்குடி பகுதியில் சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் புகார்கள் வந்தது.

. மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பிரேமானந்தன் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திருமதி. சாந்தி, திரு. அப்பாத்துரை, தலைமைக் காவலர்கள் திரு. கோபால் மற்றும் திரு. பிள்ளைமுத்து ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்செந்தூர் காயாமொழி வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த முருகபெருமாள் மகன் திருமால்,  திருச்செந்தூர் குதிரைமொழி கரிசன்விளை பகுதியைச் சேர்ந்த மணி மகன் கணேசன், அவரது மனைவி பார்வதி, ஆகிய மூவரும் திருச்செந்தூர் காயாமொழி இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் ரமேஷ் என்பவரிடம் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 19.11.2020 அன்று ரூபாய் 2,00,000/- த்தை முன்பணமாக வாங்கியுள்ளனர்.

 அதனையடுத்து 21.11.2020 அன்று மீண்டும் ரூபாய் 50,000/- பணத்தை பெற்று கொண்டு அரசு வேலைக்கான பணியாணையை வழங்கி சென்றுள்ளார்.

 அதன் பின்னர் அது போலியான பணியாணை என்று தெரிந்ததும் மேற்படி ரமேஷ் 3 எதிரிகளிடம் சென்று பணத்தை திரும்ப கேட்டதற்கு பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியுள்ளனர்.  

   இதே போன்று வேறு சிலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமண ஆணை தயாரித்து அதில் போலியான அரசு முத்திரைகளை பயன்படுத்தி கையெடுத்திட்டு  பணத்தினை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

  எனவே மேற்படி திருமால், கணேசன், அவரது மனைவி பார்வதி ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் மோசடி நபர்களை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.